சனி, ஆகஸ்ட் 20, 2011

ஷஹ்லா மஸூத் கொலை:பின்னணியில் ஐ.பி.எஸ் அதிகாரி?

தகவல் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மஸூத் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் மத்தியபிரதேச ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. தனக்கு எதிராக நடவடிக்கைகளை
மேற்கொண்டால் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்கவேண்டிவரும் என அச்சுறுத்தி ஐ.பி.எஸ் அதிகாரி பவன் ஸ்ரீவஸ்தவா எழுதிய கடிதத்தை உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்று வெளியிட்டுள்ளது.
அதேவேளையில், ஷஹ்லாவின் கொலையை தற்கொலையாக மாற்றுவதற்கான முயற்சிகளை காவல்துறை மேற்கொண்டுவருகிறது.செவ்வாய்கிழமை காலையில் தனது வீட்டிற்கு முன்பு வைத்து ஷஹ்லா சுட்டுக்கொல்லப்பட்டார். போலீஸ் விசாரணையை துவக்கியபொழுதிலும் இதுவரை துப்பு துலங்கவில்லை.ஆறு இஞ்ச் தூரத்தில் இருந்து குண்டு பாய்ந்துள்ளதாகவும் ஆதலால் இது தற்கொலையாக இருக்கலாம் என போலீஸ் கூறுகிறது.
ஆனால், சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கியை கைப்பாற்றாமலிருக்கவே இதனை தற்கொலை என கூற என்ன பொருள் உள்ளது? என ஷஹ்லாவின் தந்தை மஸூத் சுல்தான் கேள்வி எழுப்புகிறார். தனது மகள் தற்கொலை செய்ய எவ்வித காரணமுமில்லை எனவும் வேறு யாரையோ பாதுகாக்க போலீஸ் கதைகளை இட்டுக்கட்டுகிறது என அவர் குற்றம் சாட்டுகிறார்.
சில தினங்களுக்கு முன்பு ஷஹ்லாவுக்கு டெல்லியிலிருந்து தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவரது உறவினரான உமர் ஷெரீஃப் கூறுகிறார்.தகவல் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் சில முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் ஷஹ்லாவுக்கு கிடைத்ததாகவும், இதில் பீதிவயப்பட்ட சிலர் அவரது கொலையின் பின்னணியில் செயல்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக உமர்ஷெரீஃப் கூறுகிறார்.ஷஹ்லாவின் கொலையைக்குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி பவன் ஸ்ரீவஸ்தவாவுக்கு எதிராக ஏற்கனவே ஷஹ்லா மத்தியபிரதேச மாநில டி.ஜி.பிக்கு புகார் அளித்திருந்தார்.ஸ்ரீவஸ்தவா மிரட்டுவதாக குறிப்பிட்டு பிரதாப்நகர் போலீஸ் ஸ்டேசனில் அவர் புகார் அளித்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பா.ஜ.கவின் மாநிலங்களவை எம்.பி அனில் மாதவ் தாவே, சிராயு மருத்துவக்கல்லூரி சேர்மன் டாக்டர் அஜய் கோயங்கா ஆகியோரின் வருமானவரி குறித்த விபரங்களை ஷஹ்லா தகவல் உரிமைச்சட்டத்தின்படி கோரியிருந்தார்.
ஷஹ்லாவின் கொலையாளிகளை கண்டுபிடிக்க கோரி தகவல் உரிமை-மக்கள் சிவில் உரிமை ஆர்வலர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.ஷஹ்லாவின் மரணத்தைக்குறித்து விசாரிக்க கோரி மத்திய கிராமிய வளர்ச்சி துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று முன்தினம் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

கருத்துகள் இல்லை: