ஞாயிறு, மார்ச் 27, 2011

சபர்மதி எக்ஸ்பிரஸை கண்டது கூட இல்லை – கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் குற்றமற்றவர் என விடுதலைச் செய்யப்பட்ட உமர்ஜி

நான் ஒருபோதும் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலை கண்டது கூட இல்லை” என கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் 8 ஆண்டுகள் அநியாயமாக சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டு குற்றமற்றவர் என விடுதலைச் செய்யப்பட்டுள்ள ஸஈத் உமர்ஜி தெரிவித்துள்ளார்.

“நிரபராதிகளான முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை வழக்கில் சிக்கவைத்தார்கள்” என மெளலான ஹுஸைன் இப்ராஹீம் உமர்ஜி என்ற ஸஈத் உமர்ஜி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.


“இரவில் கோத்ரா வழியாக சபர்மதி எக்ஸ்பிரஸ் செல்வதால் அதனை ஒருபோதும் நான் கண்டது கூட இல்லை. சமூக சேவகரான நான், மஹாராஷ்ட்ரா மாநிலம் லத்தூரிலும், குஜராத்தில் கட்சிலும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்கு தலைமை வகித்திருந்தேன்.”

65 வயதான தேவ்பந்த் தாருல் உலூமில் பட்டம் பெற்ற உமர்ஜி ஐ.ஏ.என்.எஸ்(IANS) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகிறார்.

2002 ஆம் ஆண்டு குஜராத் இனப் படுகொலைக்குப் பிறகு ஏராளமான துயர்துடைப்பு முகாம்களை நடத்தி வந்தேன். 3500 பேர் இந்த முகாம்களில் அடைக்கலம் தேடியிருந்தனர்.கோத்ரா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் சட்ட உதவி வழங்கப்பட்டது என கோத்ராவில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் உமர்ஜி கூறுகிறார்.

எனது வாழ்க்கையில் 8 ஆண்டுகள் எவ்வித காரணமுமின்றி சிறையில் கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நானும், எனது குடும்பமும் மனோரீதியான சித்திரவதைக்கு ஆளானோம். சாதாரணமாக எங்களுடைய பெண்கள் வெளியே செல்வதில்லை. நான் சிறையிலடைக்கப்பட்டிருந்த காரணத்தால் எனது மனைவிக்கு பல நாட்கள் வெளியே செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. எனது பிள்ளைகளெல்லாம் அச்சத்துடனே வாழும் நிலைமை ஏற்பட்டது.

நான் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் பொழுதுதான் எனது நான்கு மகன்களுக்கும், இரண்டு மகள்களுக்கும் திருமணம் நடந்தேறியது.

2002 ஆம் ஆண்டு குஜராத் இனப் படுகொலையில் நரேந்திரமோடி அரசை குற்றஞ்சாட்டியதால் என் மீது பொய்வழக்கு தொடுக்கப்பட்டது. இனப் படுகொலையில் குஜராத் அரசு பங்குவகித்தது குறித்து விபரங்களை பிரதமருக்கு மனுவின் மூலமாக அனுப்பியிருந்தேன். முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளை பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அந்த மனுவை அனுப்பியிருந்தேன். அதனால் எனது வாயை மூடச் செய்தார்கள் அதிகாரிகள்.பா.ஜ.க தலைவர் ஏ.பி.வாஜ்பாயை காந்தி நகரில் சென்று சந்திக்க வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரை சந்திப்பதால் எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை என உறுதியாக தெரிந்ததால் அதற்காக முயலவில்லை.இவ்வாறு உமர்ஜி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: