வியாழன், மார்ச் 24, 2011

இனி தமிழனுக்கு ஓ.சியில் உல்லாச வாழ்க்கை: கலைஞருக்கு சற்றும் சளைக்காத ஜெ.வின் தேர்தல் அறிக்கை


இலவசங்களை வழங்கியே  வாக்காளர்களை பரவசப்படுத்தும் பாணியை போட்டிப்போட்டுக் கொண்டு இந்தியாவிலேயே தமிழகத்தின் திராவிடக் கட்சிகள்தாம் கடைப்பிடித்து வருகின்றன.
இலவசங்களை அள்ளி வழங்கி தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கலைஞருக்கு சற்றும் சளைக்காமல் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரான செல்வி.ஜெயலலிதாவும் தனது பங்கிற்கு இலவசங்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துவிட்டு தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- ஏழை மக்கள் வீடு கட்டுவதற்கு ரூ.1.80 லட்சம் மானியமாக அளிக்கப்படும்.
- ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசம்.
- வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 20 லிட்டர் தண்ணீர் இலவசம்.
- குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.
க்ளீனிக்குகளெல்லாம் இழுத்துப் பூட்டப்படுமா?
- நடமாடும் மருத்துவமனைகள் மூலம் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும் திட்டம்.
- 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் இயங்கும் தொலை மருத்துவ மையங்கள்
- வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக 3 சென்ட் நிலம்.
- கிராம, நகர்ப்புறங்களில் 4 ஆண்டுகளில் மும்முனை மின் இணைப்பு வசதி தரப்படும்.
- நடுத்தர மக்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்தில் 40 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
மாணவர்கள் லேப்டாப்பும் கையுமாக
 +1, +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அளிக்கப்படும். அதேபோல அரசுக் கல்லூரி, தனியார் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்.
- பத்து மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் அரசு, தனியார் மாணவர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.5000 வரை கல்வி உதவித் தொகை அளிக்கப்படும்.
- பள்ளி மாணவ, மாணவியருக்கு வருடத்திற்கு 4 செட் சீருடை மற்றும் காலணிகள் இலவசமாக வழங்கப்படும்.
இனி ஏ.சி மட்டும்தான் பாக்கி
- தாய்மார்களுக்கு இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும்.
பேருந்துகளில் பெரிசுகளின் கூட்டம் அலைமோதும்
- 58 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அளிக்கப்படும். நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களுக்கும் அவர்கள் இலவசமாக பஸ் பயணம் மேற்கொள்ளலாம்.
பிள்ளைகளுக்கு இனி பெற்றோரை கவனிக்கும் பொறுப்பு இல்லை
- முதியோர்கள், ஆதரவற்றோர், குழந்தைகளுக்கு சிறப்பு விடுதிகள் கட்டப்படும்.
- முதியோர் இல்லங்களில் இலவச மருத்துவ வசதி, உணவு வழங்கப்படும்.
ஆடு, மாடுகள் இலவசம் இனி ஊட்டச்சத்திற்கு பஞ்சமில்லை
- வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.
- 6 கிராமங்களில் 60 ஆயிரம் பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்.
- கரும்பு கொள்முதல் விலையை ரூ.2500 ஆக அதிகரிக்க நடவடிக்கை
- வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் இலவசம்
- கிராமப்புற தெரு விளக்களுக்கு சூரிய மின்சாரம்
- மீனவர் பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.
- மீனவர்கள் நலனுக்காக கப்பல் பூங்கா அமைக்கப்படும்.
- மீனவர் குடும்பத்திற்கான உதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.
- தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் அரசுடமையாக்கப்படும். அரசு மானியத்தில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி வழங்கப்படும்.
 - இலங்கை அகதிகள் அனைவரும் தமிழகத்திலேயே கெளரவமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக மகளிராய் பிறந்திட மாதவம் செய்திடவேண்டும்
- ஏழைப் பெண்களின் கல்யாணத்திற்கு ரூ.25,000 நிதியுதவியுடன், அரை பவுன் தங்கம் இலவசமாக அளிக்கப்படும்.
- இளநிலை அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை
-அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதமாக நீட்டிக்கப்படும்.
- ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறு கால உதவித் தொகை ரூ.12,000 வழங்கப்படும்.
-சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். 25 சதவீதம் மானியமாக அளிக்கப்படும்.
- தமிழக நதிகளை நீர்வழிச் சாலைகள் மூலம் இணைக்க நடவடிக்கை
- அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்
- மின் திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்ட படை அமைக்கப்படும்.
- விவசாயிகளைப் பங்குதாரர்களாகக் கொண்ட விவசாய நிறுவனங்கள் தொடங்கப்படும்.
- அனைத்து விவசாயிகளுக்கும் இலவச சொட்டு நீர்ப் பாசன வசதி செய்து தரப்படும்.
- திரைப்படத் துறையில் உள்ள பிரச்சினைகள் ஆராய்ந்து சரி செய்யப்படும்.
இலங்கையுடன் போர்ப் பிரகடனமா?
- கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் நலன்கள் காக்கப்படும்.
திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல அறிவிப்புகள் இதிலும் உள்ளன.
அதேசமயம், திமுக திட்டங்களின் விரிவாக்கமாக இவை அமைந்துள்ளது.
ஆனால் இரு கட்சிகளும் இரண்டு முக்கிய பிரச்சனைகளை மறந்தே விட்டன.
அவை
1.வேலை வாய்ப்பு
2.விலைவாசி உயர்வு.
இலவசங்களை வழங்கியே தமிழக மக்களை சோம்பேறிகளாகவும், கையேந்துபவர்களாகவும் மாற்றுவதுதான் இரண்டு கட்சியினரின் நோக்கமாகும். இதனை தமிழக வாக்காளர்கள் புரிந்துக் கொள்வார்களா?
சிறுபான்மை சமுதாயத்தை மறந்த ஜெ.
தேர்தல் அறிக்கையில் சிறுபான்மை சமூகத்திற்கான சலுகைகள் எதுவுமில்லை. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவேன் என ஜெ.வாக்குறுதியளித்ததாக அவருடன் கூட்டணி வைத்துள்ள சமுதாய கட்சியும், ஆதரவு தெரிவித்த முஸ்லிம் அமைப்பும் ஒன்றும் தெரிவித்திருந்தன. ஆனால், இதுப்பற்றிய எந்த வாக்குறுதியையும் தேர்தல் அறிக்கையில் ஜெ.தெரிவிக்கவில்லை. ஒருவேளை இடஒதுக்கீடு அவர் மனதில் உண்டு என்று சொன்னாரோ என்னவோ!!

கருத்துகள் இல்லை: