திங்கள், மார்ச் 28, 2011

அருண் ஜெட்லியிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் – ராம் விலாஸ் பஸ்வான்

ஹிந்துத்துவா சக்திகள் தீவிரவாதத்தை அரசியல் ஆதாயத்திற்காக உபயோகிப்பதாக லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹிந்துத்துவா தேசிய வாதத்தை பா.ஜ.கவின் சந்தர்ப்பவாதம் என அருண் ஜெட்லி அமெரிக்க தூதரிடம் தெரிவித்ததை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்த சூழலில் அவரை தீவிரவாத வழக்குகளை கையாளும் என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டுமென பஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.


அமெரிக்க தூதரக அதிகாரியிடம் ஜெட்லி கூறியது ஹிந்துத்துவாவாதிகளின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

முஸ்லிம்களுக்கெதிரான துவேசத்தை வளர்ப்பதற்காகவே பா.ஜ.க ஹிந்துத்துவா தேசியவாதத்தை உபயோகிக்கிறது என லோக் ஜனசக்தியின் பொதுச்செயலாளர் அப்துல் காலிக் தெரிவித்துள்ளார்.

ஹிந்துத்துவா என்பது உண்மையான சித்தாந்தம் அல்ல. முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை வளர்த்தி வாக்கு வங்கிகளை உருவாக்கத்தான் பா.ஜ.க முயன்றுள்ளது.

பங்களாதேஷிலிருந்து முஸ்லிம்கள் இந்தியாவில் குடியேறுவதால் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் ஹிந்துத்துவா தேசிய வாதம் நன்றாக செல்லுபடியாகும் என அருண்ஜெட்லி அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் டெல்லியில் இது செல்லுபடியாகாது. பாராளுமன்றத் தாக்குதலைப் போல ஒரு தீவிரவாத தாக்குதல் நடந்தால் டெல்லியில் நிலைமை மாறும் என ஜெட்லி அமெரிக்க தூதரிடம் கூறியிருந்தார்.

மலேகான்,அஜ்மீர்,மக்கா மஸ்ஜித்,சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் சந்தர்ப்பவாத அரசியலுக்காக பா.ஜ.க தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வது நிரூபணமாகியுள்ளது என அப்துல் காலிக் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியும் அருண் ஜெட்லியை சாடியுள்ளது.பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் மதத்தை சுய ஆதாயங்களுக்காக பயன்படுத்துவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷக்கீல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: