திங்கள், மார்ச் 21, 2011

குண்டுவீச்சில் கடாபி வீடு சுவர் சேதம்: பெங்காசி நகரம் எரிகிறது

 லிபியா மீதான ராணுவ நடவடிக்கையின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம் இரவு, கடாபியின் வீடு அருகே நடந்த போர் விமானங்களின் குண்டு வீச்சில், வீட்டின் வெளிப்பகுதி சுவர் இடிந்து தரைமட்டமானது. மேலும்,


டிரிபோலியில் இருந்து பெங்காசி வரையிலான வான்வெளிக் கட்டுப்பாடு, அமெரிக்க கூட்டுப் படைகளின் வசம் வந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிபியாவின்
 பல்வேறு நகரங்கள் மீது கடந்த இரு நாட்களாக, அமெரிக்க கூட்டுப் படைகள் குண்டு வீசி தாக்கி வருகின்றன.

தலைநகர் டிரிபோலியில், கடாபியின் குடியிருப்புக்கு மிக அருகில் இருந்த, ராணுவத்தலைமையகக் கட்டடம் ஒன்றின் மீது, நேற்று முன்தினம் கூட்டணி போர் விமானம் ஒன்று குண்டு வீசி தாக்கியது. இதில், மூன்று மாடிக் கட்டடம் தரைமட்டமாகியது. பலத்த பாதுகாப்பு நிறைந்த அக்கட்டடத்தில் யாரும் இறந்ததாக தகவல் இல்லை. அப்போது கடாபியும் அங்கு இல்லை. லிபிய அரசு செய்தித் தொடர்பாளர் மூசா இப்ராகிம் அளித்த பேட்டியில், "இது

காட்டுமிராண்டித்தனமான தாக்குதல். இப்பகுதியில் உள்ள கடாபியின் குடியிருப்பில், நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த வேளையில் தாக்குதல் நடந்துள்ளது' என்று குறை கூறினார். கடாபி இலக்கு அல்ல: இது குறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ், "கடாபியின் கட்டடம் மீதான தாக்குதல் முட்டாள்தனமானது. ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானப்படி நாம் செயல்படுவது தான் முக்கியம்' என்று கூறியுள்ளார். அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் வில்லியம் கார்ட்னே கூறுகையில், "எங்களது இலக்கு கடாபி அல்ல; லிபிய மக்களுக்கு எதிராகச் செயல்படும் அவரது ராணுவம் தான். ஆனால், கடாபியின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. எங்களின் இலக்கில் அவர் இருக்கிறாரா, இல்லையா என்று நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது' என்று தெரிவித்தார்.

இரண்டாவது போர் நிறுத்த அறிவிப்பு: டிரிபோலி, மிஸ்ரட்டா, பெங்காசி, அஜ்தாபியா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், கடாபி ராணுவம் மற்றும் ராணுவப் படைத்தளங்கள் மீது, அமெரிக்க கூட்டு படைகள் வான் வழித் தாக்குதல் நடத்தின. பெங்காசித் தெருக்களில் கடாபி ஆதரவு வீரர்கள் சடலம் 14 கிடந்தன. இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு, லிபிய அரசு செய்தித் தொடர்பாளர், இரண்டாவது முறையாக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், "ஆபரேஷன் ஒடிசி டான்' என்ற இந்த ராணுவ நடவடிக்கையில், அரபு நாடான கத்தார், பெல்ஜியம், நார்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. இதுகுறித்து நேற்று பேட்டியளித்த ராபர்ட் கேட்ஸ், "மேலும் பல அரபு நாடுகள் எங்களுடன் இணையத் திட்டமிட்டுள்ளன' என்றார்.

இந்தியா அழைப்பு: லிபியா நிலவரம் குறித்து நேற்று பேட்டியளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, "வான் வழித் தாக்குதல் வருத்தம் அளிக்கிறது. அது ஏராளமான மக்களுக்கு தீங்கையே விளைவிக்கும். இவ்விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் வன்முறையைக் கைவிட்டு பிரச்னைகளைப் பேசித் தீர்க்கும்படி இந்தியா அழைக்கிறது' என்றார்.

கச்சா எண்ணெய் காரணம்: எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் கிடைப்பதில் சுமுக சூழ்நிலை இருக்காது என்ற அடிப்படையில் லிபியா மீது தாக்குதல் நடத்தும் நாடுகள் கருதுகின்றன. சீனா, இந்தியா உட்பட சில நாடுகளின் தேவைகளுக்கு கச்சா எண்ணெய் கிணறுதுரப்பனப் பணிகளைத் தர கடாபி முன்வந்தார். இது எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் மீதான துரப்பனக்கட்டுப்பாடுகளை வைத்திருக்கும் பணக்கார நாடுகளை பாதிக்கும். பொதுவாக திறந்த வெளி டெண்டர் நடைமுறைகளை மாற்றி இந்தியா உட்பட நாடுகளுக்கு கடாபி, எண்ணெய் துரப்பன பணிகளைத் தர முன்வந்தது, இந்த மோதலுக்கு ஒரு காரணமாகும். கடாபி மீதான தாக்குதலை, எண்ணெய் வள நாடுகள் அமைப்பு முழுவதுமாக ஆதரிக்கவில்லை

கருத்துகள் இல்லை: