செவ்வாய், மார்ச் 22, 2011

ராமதாஸ் எப்பொழுது முஸ்லிம்களுக்கு நல்லது செய்தார்?

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ளார்.
 தேர்தலுக்கு தேர்தல் கூடு விட்டு கூடு தாவும் ராமதாசுக்கு இம்முறை தி.மு.க 31 இடங்களை ஒதுக்கியது. இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட சூழலில், ஒரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட ராமதாஸ் அறிவிக்கவில்லை எனக்கூறி அவரது கட்சியைச் சார்ந்த முஸ்லிம்கள் சிலரும், காயிதேமில்லத் பேரவையைச் சார்ந்தவர்களும் ராமதாஸின் உருவப் பொம்மையை நெல்லையில் எரித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.


பொதுவாகவே ராமதாஸ் வன்னிய ஜாதிக் கட்சியை நடத்திவருபவர். எக்காலத்திலும், அவர் முஸ்லிம்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டதேயில்லை என்பதுதான் உண்மை. இவரை நம்பி இன்னுமா பா.ம.கவில் முஸ்லிம்கள் உள்ளனர் என ஆச்சரியம்தான் நமக்கு ஏற்படுகிறது.
ஏனெனில் முஸ்லிம்களுக்கு துரோகமிழைப்பதையே பிழைப்பாகக் கொண்டவர் ராமதாஸ் என்பது பெரும்பாலோனோருக்கு தெரிந்த உண்மை.

சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே ராமதாஸையும், அவரது கட்சியையும் அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்த ஓயாது உழைத்தவர்தாம் சமுதாயப் போராளி பழனிபாபா அவர்கள். என்னையும், ராமதாஸையும் அடுத்தடுத்து அடக்கம் செய்யவேண்டும் எனக் கூறியவர் பழனிபாபா. இன்னும் அளவுக்கதிகமாகவே புகழ்ந்து ராமதாஸை புகழின் உச்சிக்கு கொண்டுச் சென்றார் பாபா. ஆனால், அவர் வாழும் காலத்திலேயே இந்து தமிழர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தி உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்தவர் ராமதாஸ்.

ஆர்.எஸ்.எஸ்ஸை கருவருப்பேன் என முழக்கமிட்ட ராமதாஸ் ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் பிரிவான பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தார்.

இலங்கையில், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் ஐ.எஸ்.ஐ. உளவாளிகளிடம் பயிற்சி பெற்று திரும்பி இருப்பதாகவும் அவர்களால் இந்தியாவிற்கு ஆபத்து என்றும், குறிப்பாக கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையம் போன்ற கேந்திரங்களுக்கு பெரும் ஆபத்து என ராமதாஸ் பேட்டியளித்தது இந்துத்துவ வகுப்புவாத சக்திகள் முஸ்லிம்கள் மீது சுமத்தி வந்த குற்றச்சாட்டுகளுக்கு ஈடாக தமிழக முஸ்லிம்களையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடிய சூழ்நிலைக்கு வழிவகுத்தது.

இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். அப்பாவி தமிழ் மக்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட கூடாது என்பதில் தமிழக முஸ்லிம்களும் இலங்கை வாழ் முஸ்லிம்களும் அக்கறை கொண்டவர்கள் என்பதை மறந்து எதனையோ கற்பனைச் செய்து உளறியவர்தாம் ராமதாஸ்.

அவரது கட்சியில் முக்கிய பொறுப்பை வகிக்கும் கஸ்ஸாலிக்கு எப்பொழுது சீட் கொடுத்தார். ஆகவே ராமதாஸை பொறுத்தவரை அவர் ஒரு ஜாதீய அரசியல்வாதி. எங்கு பசை இருக்கிறதோ அங்கே சென்று ஒட்டிக்கொள்ளும் சந்தர்ப்பவாதி. அவரை நம்பியிருக்கும் ஒரு சில முஸ்லிம்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் தங்களது பொன்னான நேரத்தையும், பொருளாதாரத்தையும், முயற்சிகளையும் ஜாதீய கட்சியான பா.ம.கவிற்கும் சந்தர்ப்பவாதியான ராமதாஸிற்கும் செலவழிப்பதை நிறுத்திவிட்டு சுயமரியாதை மிக்க கட்சி எதுவோ அதில் இணைந்து சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக உழைப்பதுதான் உத்தமமான செயல்.

கருத்துகள் இல்லை: