ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் ஆனது இந்தியா!


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது  முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று சாம்பியன் ஆனது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஒவர்களில் 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய இந்திய அணியில் துவக்கத்தில் சிறிது சொதப்பினாலும் பின்னர் ஆடிய கவுதம், ஹோளி, மற்றும் டோனி ஆகியோர் சிறப்பாக ஆடி 48.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு 28 ஆண்டுகள் கழித்து இப்போது தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.
இந்த முறை கோப்பையை வென்றதன் மூலம் கோப்பையை நடத்திய நாடுகள் அதன் சொந்த மண்ணில் இறுதி ஆட்டத்தை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி புதிய சாதனைப் படைத்துள்ளது இந்திய அணி. இதற்கு முன் 1996-ம் ஆண்டு போட்டியை நடத்திய இலங்கை வென்றிருந்தாலும், இறுதி ஆட்டம் பாகிஸ்தானின் லாகூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட்,இருபது ஓவர் கிரிக்கெட் என இரண்டிலும் கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் தோனி. டெஸ்ட் அரங்கிலும் அவரது தலைமையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்திய அணி கோப்பையை வென்றதும் மைதானத்தில் சச்சினை தோளில் தூக்கி வைத்து வலம் வந்தார் யூசுப் பதான். இந்திய வீரர்கள் யுவராஜ், ஹர்பஜன் சிங் ஆகியோரின் கண்களில் கண்ணீர்ப் பெருக்கெடுத்தது உணர்ச்சிபூர்வமாக இருந்தது.
இந்திய அணியின் வெற்றி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் பட்டாசுகளை வெடித்தும், பலூன்களை பறக்கவிட்டும், கலர் பொடிகளை தூவியும் வெற்றியைக் கொண்டாடினர். கார்களில் தேசியக் கொடியை ஏந்தியும் வலம் வந்தனர்.
பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், உரக்கக் குரல் எழுப்பியும் கொண்டாடினர். 1983-ல் இந்தியா கோப்பையை வென்றபோது ஏற்பட்ட அதே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் இந்தியா முழுவதும் காண முடிந்தது.

கருத்துகள் இல்லை: