வெள்ளி, ஏப்ரல் 08, 2011

தி.மு.க.- பா.ம.க. மோதல்: பிரச்சனையை சரிகட்டினார் வேட்பாளர்!


பரங்கிப்பேட்டை: சிதம்பரம் தொகுதியில், தி.மு.க., - பா.ம.க, நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னையில், வேட்பாளரே நேரடியாகச் சென்று அதிருப்தியாளர்களை சரிக்கட்டினார்.  சிதம்பரம் தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் மூ.மு.க., வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடுகிறார். கடந்த, 1ம் தேதி, கொத்தட்டை கிராமத்தில், ஸ்ரீதர் வாண்டையார் ஓட்டு கேட்க சென்ற போது, தி.மு.க., சேர்மன் முத்து பெருமாள், பா.ம.க., நிர்வாகிகளை அறிமுகப்படுத்தவில்லை. இதனால், பா.ம.க.,வைச் சேர்ந்த காண்டீபன், தாமோதரனும் சேர்மன் முத்து பெருமாளை நெட்டித் தள்ளினர். தகவல் அறிந்த முத்து பெருமாளின் தம்பி, பா.ம.க.,வைச் சேர்ந்த முடிவண்ணன், 50க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினருடன் கொத்தட்டைக்குச் சென்று, காண்டீபன், தாமோதரனையும் தாக்கினர்.  இதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து, 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.



இப்பிரச்னையால் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு இடையே, "ஈகோ' தலை தூக்கியது. மேலும், கொத்தட்டை உட்பட சில இடங்களில் வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு ஓட்டு வங்கி குறையும் சூழல் நிலவியது. உளவுப் பிரிவின் அறிக்கையைத் தொடர்ந்து, வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் கொத்தட்டை கிராமத்திற்குச் சென்று காண்டீபன், தாமோதரனை சந்தித்து ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினார். இதேபோல், அதிருப்தியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் தனியாக கவனிக்கப்பட்டு வருகின்றனர். ஸ்ரீதர் வாண்டையாரை வெற்றி பெறச் செய்ய ஆளும் கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதால், உளவுப் பிரிவு போலீசார் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: