ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

‘சேவா’ தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வகுப்புவாத பிரச்சாரத்திற்கு உபயோகிக்க முயன்றார் மோடி – விக்கிலீக்ஸ்


குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி ”சேவா (Self Employed Women’s Association)” என்ற பெண்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வகுப்பு வாத பிரச்சாரத்திற்கு உபயோகிக்க முயன்றதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.’சேவா’ வின் பொதுச்செயலாளர் ரீமா பென் நானாவதி மும்பையில் அமெரிக்க தூதரக அதிகாரி மைக்கேல் எஸ் ஓவனிடம் இதனை தெரிவித்துள்ளார். இச்செய்தியை ஓவன் கடந்த 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி வாஷிங்டனுக்கு அனுப்பியுள்ளார்.

‘சேவா’வில் அதிகமான ஆட்களை உறுப்பினர்களாக சேர்த்து அவர்கள் மூலமாக வகுப்புவாத சித்தாந்தத்தை பரப்ப மோடி தலைமையிலான குஜராத் அரசு முயன்றது. இதற்கு ஒப்புக் கொள்ளாததால் குஜராத் அரசின் பகையை சம்பாதித்துள்ளதாக நானாவதி அமெரிக்க தூதரக அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.மானியங்களை நிறுத்திவைத்து ‘சேவா’ வை தனது வழிக்கு கொண்டுவர குஜராத் அரசு முயல்கிறது. கட்ச் பகுதியில் ‘சேவா’வின் பணிகளை எதிரி மனப்பான்மையோடு காண்கிறது குஜராத் அரசு.
கட்ச் பகுதியில் பணியாற்றுவதற்காக வழங்கப்படும் மானியத்தை தராமல் முடக்கியுள்ளது குஜராத் அரசு. உறுப்பினர்கள் மத்தியில் சமூக வேறுபாடுகளில்லாமல் ஐக்கியம்தான் ‘சேவா’வின் வெற்றிக்கு காரணம். அரசு மானியத்தை முடக்கியதால் 12 ஆயிரம் பெண்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்க இயலவில்லை.மோடியின் அரசு 2002 இனப்படுகொலைக்கு பிறகு எல்லாம் மாமூலான நிலைமைக்கு திரும்பியுள்ளதாக கூறிவருகிறது.ஆனால், அரசியல் ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியை அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள் என நானாவதி அமெரிக்க தூதரக அதிகாரியிடம் கூறியுள்ளார்.
வெளியே சமாதானமும், உள்ளே வகுப்புவாதத்தையும் வளர்க்கும் கொள்கையை குஜராத் அரசு தொடர்ந்து கடைப்பிடித்துவருவதாக ஓவன் வாஷிங்டனுக்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.வருங்காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினரை தேசிய நீரோட்டத்திலிருந்து மேலும் அகற்றுவதற்கு முயன்றுவருகிறது.பொது வாழ்க்கையை வகுப்புவாத மயமாக்க குஜராத் அரசு முயல்கிறது. இது கூடுதல் மோதல்களுக்கும், இரத்தம் சிந்துவதற்கும் உதவும் என ஓவன் அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.
யார் யாரெல்லாம் குஜராத் கலவரத்தில் குற்றவாளிகள்?அவர்களுடைய பங்கு என்ன? என்பது குறித்து வினவியபொழுது, ஏன் அமெரிக்கா கலவர விவகாரத்தில் கவலைக்கொள்கிறது? என குஜராத் முதன்மை செயலாளர் சுதீர் மங்காட் அமெரிக்க தூதரக அதிகாரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்? நீங்கள் எப்பொழுதும் கலவரத்தை குறித்துதான் கவலைப்படுகின்றீர்கள். உலகில் வேறு எவ்வளவோ காரியங்களும் நடக்கின்றது என மங்காட் கூறியுள்ளார்.மனித உரிமையை கவனத்தில் கொண்டு அமெரிக்கா குஜராத் பிரச்சனையை தொடர்ந்து நுட்பமாக கண்காணிக்க வேண்டுமென கூறி ஓவன் வாஷிங்டனுக்கு அனுப்பிய தனது செய்தியை முடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: