வெள்ளி, ஏப்ரல் 15, 2011

வகுப்புவாதத்திற்கு நான் எப்பொழுதும் எதிரானவன்: ஹஸாரே

வகுப்புவாதத்திற்கு நான் எப்பொழுதுமே எதிரானவன்.நரேந்திர மோடியும், நிதீஷ்குமாரும் கிராமீயத்துறையில் ஏற்படுத்திய வளர்ச்சியை மட்டுமே புகழ்ந்தேன் என அன்னா ஹஸாரே தெரிவித்துள்ளார்.
மோடியை புகழ்த்திய அன்னா ஹஸாரேவின் நடவடிக்கையை கண்டித்து கடிதம் எழுதிய பிரபல நாட்டிய கலைஞர் மல்லிகா சாராபாய்க்கு எழுதிய பதில் கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளார் ஹஸாரே.
பீகாரிலும்,குஜராத்திலும் கிராமீய துறையில் வளர்ச்சிப் பணிகளைக் குறித்து தன்னிடம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பினர். பீகாரிலும், குஜராத்திலும் கிராமீயத் துறையில் மிகச்சிறந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் பதில் அளித்தேன். அதேவேளையில் 2002-ஆம் ஆண்டு நடந்த வகுப்புக் கலவரத்தையும், வகுப்பு வெறியையும் நான் கண்டித்திருந்தேன் என ஹஸாரே கூறியுள்ளார்.
நான் அரசியலுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவன்.ஊழலை வேரோடு அழித்தொழிக்கத்தான் நான் பணியாற்றுகிறேன். இது நீண்ட போராட்டம், தங்களைப் போன்றவர்களால் எனது போராட்டத்தின் உணர்வை புரிந்துக்கொள்ள இயலும் என நான் நம்புகிறேன்.
மோடி தொடர்பாக விளக்கம் கூறும் சூழல் ஏற்பட்டதற்காக நான் வருந்துகிறேன் என சுட்டிக்காட்டிய ஹஸாரே முன்னேற்றத்தை நோக்கி வெளிச்சத்தை பாய்ச்சும் தங்களைப் போன்றவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என மல்லிகா சாராபாய்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஹஸாரே.
இந்நிலையில்,ஹஸாரேவை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் திக் விஜய் சிங். “ஹஸாரே புகழாரம் சூட்டும் குஜராத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக லோகாயுக்தா கூட இல்லை என திக் விஜய் சிங் சுட்டிக்காட்டுகிறார். இதனால் ஊழலுக்கெதிராக எங்கே சென்று புகார் அளிக்கவேண்டுமென்பது மக்களுக்கு தெரியவில்லை. மோடியை புகழ்த்துவதற்கு பதிலாக லோகாயுக்தாவை நியமிக்க மோடியிடம் ஏன் ஹஸாரே அழுத்தம் கொடுக்கவில்லை?” என திக் விஜய் சிங் கேட்கிறார்.

கருத்துகள் இல்லை: