வியாழன், ஆகஸ்ட் 18, 2011

இன்று விடுதலையாகிறார் ஹஸாரே:ராம்லீலா மைதானத்தில் 15 நாட்கள் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு அனுமதி

வலுவான லோக்பால் மசோதாவை கோரி போராட்டம் நடத்தவிருந்த அன்னா ஹஸாரேவை கைதுச் செய்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையொட்டி அவரை விடுதலைச் செய்ய மத்திய அரசுக்கு நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனால், தனக்கு
 நிபந்தனையற்ற உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவதற்கு அனுமதி தந்தால் மட்டுமே விடுதலையாவேன் என ஹஸாரே பிடிவாதம் பிடித்தார். இதனைத்தொடர்ந்து 15 நாட்கள் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு அனுமதியளிக்க டெல்லி போலீஸ் முடிவுச்செய்ததையொட்டி அவர் இன்று விடுதலையாவார் என கருதப்படுகிறது.
ஹஸாரே குழுவைச் சார்ந்த அரவிந்த் கேஜ்ரவால், மனீஷ் ஸிஸோடியா, கிரண் பேடி, பிரசாந்த் பூஷன் ஆகியோர் டெல்லி போலீஸ் கமிஷனர் பி.கே.குப்தாவுடன் அவருடைய வீட்டில் வைத்து நேற்று இரவு நடத்திய பேச்சுவார்த்தையில் இதுத்தொடர்பான சுமூக நிலை ஏற்பட்டது. இரண்டுவார கால போராட்டம் என்ற போலீஸாரின் நிபந்தனையை ஹஸாரே அங்கீகரித்ததாக இன்றுகாலை கிரண் பேடி தனது ட்விட்டர் செய்தியில் அறிவித்தார்.
இன்று மாலை 3 மணிக்கு ஹஸாரே ராம்லீலா மைதானத்திற்கு வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: