புதன், ஆகஸ்ட் 17, 2011

ஹஸாரே திகார் சிறையில்-நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு – விடுதலைச்செய்ய அரசு முடிவு

ஊழலுக்கு எதிராக முழுமையான லோக்பால் மசோதாவை கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானித்த அன்னா ஹஸாரே மற்றும் அவரது ஆதரவாளர்களை கைதுச் செய்து சிறையிலடைத்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய மு
ற்போக்கு கூட்டணி அரசு பின்னர் நாடுமுழுவதும் கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பை தொடர்ந்து அவர்களை விடுதலைச்செய்ய முடிவெடுத்துள்ளது.
ஹஸாரேயை விடுதலைச் செய்வதற்கான ரிலீஸ் வாரண்டை நீதிமன்றத்திற்கு அனுப்பியதாக போலீஸ் அறிவித்துள்ளது. ஆனால், உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நிபந்தனையற்ற அனுமதி கிடைக்காமல் சிறையிலிருந்து வெளியேறமாட்டேன் என ஹஸாரே கூறியுள்ளார்.
முன்னர் தனிநபர் ஜாமீனில் வெளிவர ஹஸாரே மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து அவரை ஏழு நாட்கள் ரிமாண்ட் செய்து சிறைக்கு அனுப்பியது நீதிமன்றம். அரவிந்த் கேஜ்ரவால், மனோஜ் ஸிஸோடியா, ராஜேஷ், சுரேஷ் பதாரே ஆகிய அன்னா ஹஸாரே ஆதரவாளர்களும் திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இவர்களுடன் கைதுச் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண் பேடி மற்றும் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோரை போலீஸ் விடுதலைச் செய்தது.
ஹஸாரேயை ஊழல் வழக்கில் கைதுச் செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடி, கலைஞர் டி.வி எம்.டி சரத்குமார் ஆகியோர் தங்கவைக்கப்பட்டிருக்கும் திஹார் சிறையின் நான்காம் எண் சிறையில் அடைத்தனர். அரவிந்த் கேஜ்ரவால், ஸிஸோடியா ஆகியோரை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, டி.பி ரியாலிட்டீஸ் எம்.டி.ஷாஹித் பல்வா ஆகியோர் தங்கவைக்கப்பட்டிருக்கும் ஒன்றாம் நம்பர் சிறையில் அடைத்துள்ளனர்.
ஹஸாரேவின் கைதை கண்டித்து டெல்லியிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடைபெற்றன. பாராளுமன்றத்தின் இரு சபைகளும் அமளியால் ஸ்தம்பித்தன. அன்னா ஹஸாரேவின் கைதுக் குறித்து தேசிய மனித உரிமை கமிஷன் மத்திய உள்துறை செயலாளரிடமும், டெல்லி போலீஸ் கமிஷனரிடமும் விளக்கம் தேடியுள்ளது.
அன்னா ஹஸாரேவும், ஆதரவாளர்களும் தடையை மீறி போராட்டம் நடத்த தீர்மானித்ததை தொடர்ந்து அவர்களை டெல்லி போலீஸ் கைதுச் செய்தததாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்தார். போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக அன்னா ஹஸாரேவுக்கு நீதிமன்றத்தை அணுகலாம் எனவும், சமூக சேவகர்களுக்கு மைதானத்தில் உருவாக்கியது அல்ல சட்டம் எனவும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: