சனி, அக்டோபர் 15, 2011

சவூதி தூதரை கொல்ல ஈரான் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா – ஈரான் மறுப்பு

அமெரிக்காவில் சவூதி அரேபியா தூதரை தீவிரவாத தாக்குதல் மூலம் கொலைச் செய்ய ஈரான் அரசின் ஆதரவுடன் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டி அமெரிக்கா இரண்டு பேர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

ஈரான்-அமெரிக்கா குடியுரிமை பெற்ற மன்சூர் அர்பாப்ஸியர், ஈரானின் குத்ஸ் படை உறுப்பினரான குலாம் ஷவ்காரி ஆகியோர் மீது அமெரிக்கா க்ரிமினல் குற்றத்தை சுமத்தியுள்ளது. இவர்களில் அர்பாப்ஸியரை கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி நியூயார்க் விமானநிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

தாக்குதல் சதித்திட்டத்தில் ஈரான் அரசின் சிலருக்கு பங்குண்டு என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ரகசிய புலனாய்வு பிரிவு மற்றும் போலீஸாரின் ஒருங்கிணைந்த விசாரணையில் கொலை செய்யும் திட்டத்தை கண்டறிந்ததாகவும் இச்சம்பவத்தைக் குறித்து விரிவாக விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. இக்குற்றச்சாட்டு அரசியல் தூண்டுதலானது என ஐ.நாவில் ஈரானின் தூதர் முஹம்மது பஸாஇ தெரிவித்துள்ளார். பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலானது அமெரிக்காவின் குற்றச்சாட்டு.

ஈரானுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரமாக மட்டும் இதனை காணவியலாது என முஹம்மது பஸாஇ ஐ.நா பொதுச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஈரானிற்கான பொறுப்பை அமெரிக்காவிற்காக வகிக்கும் சுவிஸ் தூதரை அழைத்து ஈரான் விளக்கம் கேட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: