செவ்வாய், அக்டோபர் 11, 2011

போர்ப்ஸ்கஞ்ச் துப்பாக்கிச்சூடுக் குறித்து சி.பி.ஐ விசாரணை: பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கர்ப்பிணி, 6 மாத பச்சிளம் குழந்தை உள்பட 5 பேரை அநியாயமாக சுட்டுக் கொன்ற பீகார் மாநில போலீசாரின் அராஜக துப்பாக்கிச்சூடு குறித்து சி.பி.ஐ
 விசாரணை நடத்துவதுக் குறித்து உச்சநீதிமன்றம் பீகார் அரசின் நிலைப்பாட்டை குறித்து விளக்கம் கேட்டுள்ளது.

சி.பி.ஐ விசாரணைக்கோரி மனித உரிமை பாதுகாப்பு இயக்கம் அளித்த மனு மீதான விசாரணையில் டிவிசன் பெஞ்ச் பீகார் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கிராமவாசிகள் மீது எவ்வித காரணமுமின்றி துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸாரை மாநில அரசு பாதுகாப்பதாக மனித உரிமை அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வீதமும், காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வீதமும் இழப்பீடு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிடவேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 3-ஆம் தேதி போர்ப்ஸ் கஞ்சில் துப்பாக்கிச்சூடு நடந்தது. ராம்பூர்-பஜன்பூர் கிராமங்களை இணைக்கும் சாலையை தனியார் தொழிற்சாலை ஒன்று மறித்தது தொடர்பான பிரச்சனையில் கிராமவாசிகள் நடத்திய போராட்டத்தில் பீகார் போலீஸார் தங்களது கொடூரத்தை அரங்கேற்றினர். மருத்துவமனை, சந்தை உள்ளிட்ட தேவைகளுக்கு இச்சாலையை கிராமவாசிகள் பயன்படுத்தி வந்தனர். இது குறித்து நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் சாலையில் உள்ள தடை நீக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இரண்டு தினங்கள் கழிந்த பிறகும் சாலையில் கட்டப்பட்ட கான்க்ரீட் மதில் இடிக்காததால் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஊர்மக்கள் சேர்ந்து மதிலை இடித்துத் தள்ளினர். மக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர் ஆனால், மாலை 4.30க்கு வந்த போலீஸார் வழியில் சென்றுக் கொண்டிருந்த கிராமவாசிகள் மீது கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஐந்துபேர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணித்தனர். ஒன்பது பேருக்கு காயம் ஏற்பட்டது. மரணித்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் மீது அவர்களின் இடுப்புக்கு மேலே குண்டடி பட்டுள்ளதால் கொலைச் செய்யும் நோக்கத்துடனே போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது நிரூபணமாகியுள்ளது என மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆபிஸ் ஹுஸைன் அன்ஸாரி கூறுகிறார்.

தலையில் துப்பாக்கியால் சுட்டு தனது ஆறு மாத பருவமுடைய பேரனை போலீஸ் கொலைச் செய்ததாக முஹம்மது ரஃபீக் அன்ஸாரி கூறுகிறார். அன்ஸாரியின் மகள் ரிஹானா தனது ஆறுமாத குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்றுக் கொண்டிருக்கும் போதுதான் போலீஸாரின் இந்த கொடூரம் அரங்கேறியது. கையில் குண்டடிப்பட்ட ரிஹானாவிடமிருந்து குழந்தை கீழே விழுந்துள்ளது. உடனே போலீஸார் 6 மாத குழந்தையான நவ்ஷாதின் தலையில் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொலைச் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: