வியாழன், அக்டோபர் 13, 2011

அன்னா ஹஸாரே-ஆர்.எஸ்.எஸ் தொடர்பை நிரூபிக்கும் கடிதத்தை வெளியிட்டார் திக்விஜய்சிங்

அன்னா ஹஸாரேக்கும்-ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும் இடையேயான தொடர்பை நிரூபிக்கும் கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்
பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் வெளியிட்டார். ஹஸாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ்ஸின் பொதுச் செயலாளர் சுனில்ஜோஷி எழுதிய கடிதத்தை திக்விஜய் சிங் வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் எட்டாம் தேதி எழுதப்பட்ட கடிதத்தில் சுனில்ஜோஷி ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஹஸாரேக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் பூரண ஆதரவை வாக்குறுதியளித்துள்ளார்.

 மார்ச்சில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் செயற்குழுவில் ஊழலைக் குறித்து தீவிரமாக விவாதிப்பதாகவும், ஹஸாரே நடத்தும் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை அளிக்க தீர்மானித்துள்ளதாகவும் சுனில் ஜோஷி கடிதத்தில் கூறியுள்ளார். இந்த கடிதத்தை அன்னா ஹஸாரே வாசிக்கவில்லையா? என திக்விஜய்சிங் கேள்வி எழுப்பினார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காரியம் என்பதால் நீங்களாவது வாசிக்கவேண்டும் என்ற அடிப்படையில் கடிதத்தை வெளியிடுவதாக திக்விஜய்சிங் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ் தனது செயல்திட்டத்தை(அஜண்டா) நடைமுறைப்படுத்த அன்னா ஹஸாரேவை உபயோகிப்பதாக திக்விஜய்சிங் குற்றம்சாட்டினார்.

நேற்று முன்தினம் ஹரியானா மாநிலம் ஹிஸார் பாராளுமன்ற இடைத்தேர்தலில் ஹஸாரே குழுவினரின் ஊழல் எதிர்ப்பு கொள்கையின் கபடவேடத்தை வெளிச்சம்போட்டு காட்டி திக்விஜய்சிங் ஹஸாரேக்கு மனம் திறந்த மடல் ஒன்றை எழுதியிருந்தார். இதன் பின்னர்தாம் ஹஸாரேயின் ஆர்.எஸ்.எஸ் தொடர்பை நிரூபிக்கும் கடிதத்தை திக்விஜய்சிங் வெளியிட்டுள்ளார்.

ஜன லோக்பால் மசோதாவை நடைமுறைப்படுத்த ஹஸாரே உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கும்போதே ஹஸாரே ஆர்.எஸ்.எஸ்ஸின் முகமூடி என திக்விஜய்சிங் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அப்பொழுது திக்விஜய்சிங்கின் குற்றச்சாட்டை மறுத்த ஹஸாரே திக்விஜய்சிங்கை மனநல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

ஜனலோக்பால் மசோதாவிற்காக முதன்முதலில் ஜந்தமந்தரில் ஹஸாரே உண்ணாவிரதம் மேற்கொண்டபொழுது இப்போராட்டத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக திக்விஜய்சிங் கூறியிருந்தார். ஹஸாரே ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தின் இரண்டாவது பாகத்தை துவக்கிய பொழுது பாரதமாத உருவப்படத்திற்கு பதிலாக காந்தியடிகளின் உருவப்படம் மேடையில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: