ஞாயிறு, நவம்பர் 13, 2011

திருமணம் செய்ததை மறைத்து பெற்றோருடன் வாழ்ந்தார்; காதலனுடன் கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்

சென்னை சைதாப்பேட்டை வடக்குகாவரை தெருவை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகள் பவிதா (வயது 19). கல்லூரி மாணவி. இவருக்கு அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி முத்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தர்மராஜ் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மலர்ந்தது. 3 வருடமாக இருவரும் காதலித்து வந்தனர்.
 
அவர்கள் இருவரும் கடந்த 6-4-2011 அன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள கோவிலில் தாலி கட்டி பதிவு திருமணம் செய்து கொண்டனர். பவிதா திருமணம் செய்ததை மறைத்து பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். அவ்வப்போது தர்மராஜையும் சந்தித்து பேசினார். இது பவிதாவின் பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
 
திருமணம் செய்தது தெரிந்து விடுமோ என பயந்த பவிதா கடந்த 1-10-2011 அன்று வீட்டில் யாருக்கும் தெரியாமல் காதல் கணவருடன் சென்றார். மகள் காணாததையடுத்து உதயகுமார் சைதாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் பவிதாவை தேடி வந்தனர். 
 
இந்தநிலையில் நேற்று மாலை பவிதா, காதல் கணவர் தர்மராஜூடன், தூத்துக்குடி தென்பாகம் போலீசில் தஞ்சமடைந்தார். தர்மராஜூடன் சேர்ந்து வாழப்போவதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நன்றி: மாலைமலர்

கருத்துகள் இல்லை: