ஞாயிறு, மார்ச் 27, 2011

ஆர்.எஸ்.எஸ். தொடர்பு – வேட்பாளரை மாற்றிய மம்தா

ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய வேட்பாளரை திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலிருந்து நீக்கியுள்ளார் மம்தா பானர்ஜி.

மேற்குவங்காளத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டது.

இப்பட்டியலில் ஜோராஸாங்கோ தொகுதிக்கான வேட்பாளராக சாந்திலால் ஜெயின் என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார். இவர் முன்பு பா.ஜ.கவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தவராவார். மேலும் இவர் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்புடையவர்.


1992 ஆம் ஆண்டு இறையில்லமான பாப்ரி மஸ்ஜித் இடிப்பு சம்பவத்திலும் தொடர்புடையவராவர். ஜெயினின் ஆர்.எஸ்.எஸ் தொடர்பை சுட்டிக்காடி சி.பி.எம் கட்சி பிரச்சாரத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மம்தா சாந்திலால் ஜெயினை வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டார். அவருக்கு பதிலாக கொல்கத்தா மாநகராட்சி சேர்மன் ஸ்மிதா பக்ஷி ஜோராஸாங்கோ தொகுதியில் போட்டியிடுவார்.

உடல் நலன் காரணமாக வேட்பாளர் பட்டியலிருந்து ஜெயின் நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமான காரணம் கூறப்பட்டாலும், இதர தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதால் மம்தா ஜெயினை வேட்பாளர் பட்டியலிருந்து நீக்கிவிட்டார் என கூறப்படுகிறது.

தனது வேட்பாளர் தகுதி பறிபோகும் என்பதை அறிந்த ஜெயின் மம்தாவை சந்தித்துப் பேசினார். ஆனால், அவருடைய கோரிக்கையை ஏற்க மம்தா மறுத்துவிட்டார்.

கருத்துகள் இல்லை: