வியாழன், மார்ச் 31, 2011

மொகாலி மைதானத்தில் தொழுகை நடத்தியது புனிதப் போராம்: பால்தாக்கரேயின் பிதற்றல்


‘பல் போனால் சொல் போச்சு’ என்றதொரு பழமொழி நம்ம ஊர்களில் புழக்கத்தில் உள்ளது. பல்லிழந்த கிழட்டு சிங்கமான பால்தாக்கரேக்கு சொல்  மட்டுமல்ல புத்தியும் பேதலித்துவிட்டதை அவ்வப்போது அவர் வெளியிடும் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே பால்தாக்கரேக்கு இரத்த அழுத்தம் சற்று அதிகமாகவே எகிறும்.நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தை காண பாக்.அதிபர் மற்றும் பிரதமருக்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அழைப்பு விடுத்திருந்தார்.

கடந்த 2008 மும்பை தாக்குதலுக்கு பிறகு  இரு நாடுகளுக்கிடையேயான உறவில் ஏற்பட்டுள்ள இறுக்கத்தை தணிக்கக் கூடியது என பல தரப்பினரும் பிரதமரின் அழைப்பை பாராட்டினர்.இதையொட்டி இருநாடுகளின் உள்துறை அமைச்சர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் சில முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
பிரதமரின் அழைப்பை ஏற்று பாக்.பிரதமர் கிலானியும் இந்தியாவுக்கு வருகைத்தந்தார். ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக அமைதியை விரும்பாத, மதவெறியை அடிக்கடி கிளறிவிடும் பால்தாக்கரே பாக்.வீரர்கள் பயிற்சியின் போது தொழுகை நேரத்தில் தங்களது மார்க்க கடமையை மைதானத்தில் நிறைவேற்றியதை இந்தியாவின் மீதான புனிதப்போர் பிரகடனம் என பிதற்றியுள்ளார்.
அவர்கள் தங்களது அறைகளில் சென்று தொழுகையை நடத்த வேண்டுமாம். தொழுகை என்பது உலக முஸ்லிம்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரங்களில் பின்பற்றும் ஒரு கட்டாய மார்க்கக் கடமை.அது ஒரு குறிப்பிட்ட தேசத்தின் அடையாளம் அல்ல என்ற அறிவு கூட பால்தாக்கரேக்கு இல்லை.
ஏவுகணைகளையும், பீரங்கிகளையும் மைதானத்தை சுற்றி நிறுத்தியது ஏன்? என கேள்வி எழுப்புகிறார் பால்தாக்கரே.இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் பால்தாக்கரேயின் உற்ற தோழர்களான ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டெல்லியிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு சென்ற சம்ஜோதா எக்ஸ்பிரஸில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வைத்த குண்டினால் பலியானது 68 உயிர்கள். அதில் பெரும்பாலோர் பாகிஸ்தானியர்கள். இவ்வேளையில் பாக்.பிரதமர் மற்றும் பாக்.கிரிக்கெட் வீரர்களை கொலை செய்ய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் எனக்கருதி அரசு இத்தகையதொரு பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கலாம். இதில் என்ன தவறு இருக்கிறது?
பாகிஸ்தான் பிரதமரையும்,அதிபரையும் கிரிக்கெட் போட்டியை காண பிரதமர் விடுத்த அழைப்பை கிண்டலடித்துள்ள பால்தாக்கரே, அப்சல் குருவையும், அஜ்மல் கசாப்பையும் போட்டியை காண அழைக்க வேண்டியதுதானே என கூறியுள்ளார்.
மும்பையில் 1993-ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் 3000க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் படுகொலைக்கு காரணமான பால்தாக்கரே(நீதிபதி கிருஷ்ணா கமிஷன் அறிக்கையின்படி) அஜ்மல் கசாபையும், அப்பாவியான அப்சல் குருவையும் குறித்து பேச என்ன தகுதியிருக்கிறது?
முன்பு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மியாண்டட்டை கடுமையாக விமர்சித்த பால்தாக்கரே பின்னர் மியாண்டட் அவரை சந்தித்த பொழுது கூடிக்குலாவியதை இந்திய மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
 3000க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் படுகொலைக்கு காரணமான ஒரு பயங்கரவாதிக்கு இந்தியாவின் நீதிபீடம் உச்சபட்ச தண்டனையை அளித்திருந்தால் இம்மாதிரி பிதற்றும் சூழல் உருவாகியிருக்காது.

கருத்துகள் இல்லை: