புதன், ஏப்ரல் 06, 2011

கஷ்மீர்:பொது பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறையிலடைக்கப்பட்ட சிறுவன் விடுதலை

கஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொது பாதுகாப்புச் சட்டத்தின்படி(பி.எஸ்.எ) கைது செய்யப்பட்ட ஃபைஸான் ரஃபீக் என்ற சிறுவன் விடுதலைச் செய்யப்பட்டான்.
ரஃபீக்கை கத்வா சிறையிலிருந்து விடுவித்ததாக அவருடைய தந்தை ரஃபீக் அஹ்மத் ஹகீம் தெரிவித்துள்ளார். சிறுவனை பி.எஸ்.எ சட்டத்தின் கீழ் கைது செய்தது கஷ்மீரில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் போலீஸ் ரஃபீக்கை கைது செய்தது. சிறுவனை சிறையில் அடைத்ததை மனித உரிமை ஆர்வலர்களும், எதிர் கட்சியினரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். தொடர்ந்து மனிதநேயத்தின் அடிப்படையில் சிறுவனை விடுதலைச் செய்ய முதல்வர் உமர் அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.
சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் ரஃபீக்கை விடுதலைச் செய்வதற்காக பிரச்சாரத்தை துவக்கியிருந்தது.
பொது பாதுகாப்பு சட்டத்தின்படி 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களை சிறையிலடைக்க கூடாது. ரஃபீக்கிற்கு 14 வயதுதான் ஆகியுள்ளது. இதனை நிரூபிக்கும் பிறப்பு சான்றிதழை அவரது குடும்பத்தினர் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

கருத்துகள் இல்லை: