வெள்ளி, ஏப்ரல் 08, 2011

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை இன்று துவக்கம்


கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துந்நாஸர் மஃதனி குற்றம் சாட்டப்பட்டுள்ள பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை இன்று துவங்குகிறது. கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 34-ஆம் எண் நகர சிவில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்.நீதிபதி ஹெச்.எல்.ஸ்ரீனிவாசன் வழக்கை பரிசீலிப்பார்.
வழக்கின் குற்றப்பத்திரிகை தொடர்பாக நடவடிக்கைகளை பூர்த்திச்செய்து விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் விசாரணை துவங்க காலதாமதமானது.
கடந்த 2008-ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் மரணித்தார்.20 பேருக்கு காயம் ஏற்பட்டது.இவ்வழக்கில் 32 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.அப்துல் நாஸர் மஃதனி உள்பட 19
பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் எனக்கூறப்படும் 4 பேர் 2008 அக்டோபர் மாதம் கஷ்மீர் மாநிலத்தில் நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக போலீஸ் கூறுகிறது.
ஒன்பது பேர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.இவ்வழக்கில் 280 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் முதல் இரண்டு குற்ற பத்திரிகைகளில் பெயர் சேர்க்கப்படாத அப்துல் நாஸர் மஃதனி மூன்றாவது குற்ற பத்திரிகையில் 31-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.இதனை சுட்டிக்காட்டி அவர் ஜாமீன் கோரிய பொழுது குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக அரசு தரப்பு கூறியதை ஏற்றுக் கொண்டு கர்நாடகா மாநில உயர் நீதிமன்றம் ஜாமீனை மறுத்துவிட்டது.

கருத்துகள் இல்லை: