ஞாயிறு, அக்டோபர் 09, 2011

பரங்கிப்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க.,வில் போட்டி வேட்பாளர்கள் கணக்கெடுப்பு

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் அ.தி.மு.க., கட்சி வேட்பாளருக்கு எதிராக களமிறங்கியுள்ள போட்டி வேட்பாளர்கள் யார் என்பது குறித்து
 கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. அ.தி.மு.க., சார்பில் நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்,

வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இருந்தும் கட்சியில் சீட் கிடைக்காமல் அதிருப்தியாளர்கள் கட்சி வேட்பாளருக்கு எதிராக பல இடங்களில் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். இதனால் அ.தி.மு.க., வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என கட்சி தலைமைக்கு புகார் சென்றன.

அதன் பேரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா, போட்டிகளை தவிர்த்து கட்சியின் வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றுங்கள். போட்டியாக மனு தாக்கல் செய்துள்ள கட்சியினர் மனுக்களை வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இருந்தும் பல இடங்களில் போட்டி வேட்பாளர்கள் வாபஸ் பெறாமல் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க., கட்சி வேட்பாளருக்கு எதிராக களமிறங்கியுள்ள போட்டி வேட்பாளர்கள் யார், யார் என கடலூர் மேற்கு மாவட்டத்தில் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. ஒன்றிய செயலர்கள், நகர செயலர்கள் மூலம் மாவட்டச் செயலர் அருண்மொழித்தேவன் கணக்கெடுத்து வருகிறார். இதனால் போட்டி வேட்பாளர்கள் கதிகலங்கி போய் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: