ஞாயிறு, நவம்பர் 20, 2011

நந்திகிராம்:கொல்லப்பட்டவர்களின் உடல்களை ஆற்றில் வீசுவதற்கு கொண்டுசென்ற டிரைவர் கைது

கடந்த 2007-ஆம் ஆண்டு நந்திகிராமை கைப்பற்ற சி.பி.எம் குண்டர்களால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டவர்களின் உடல்களை ஆற்றில் வீச
 சென்ற ஆம்புலன்ஸ் டிரைவரை சி.ஐ.டி போலீஸார் கைதுச் செய்துள்ளனர். ஆம்புலன்ஸும் கைப்பற்றப்பட்டுள்ளது. சக்திபடா தளபதி என்பவர்தாம் கைதுச் செய்யப்பட்ட டிரைவர் ஆவார்.

கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் கைஜூரியில் வைத்து இவரை கைது செய்ததாக சி.ஐ.டி போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். ஏழு உடல்களை இவர் ஆற்றில் வீசியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு போராட்டக்காரர்களிடமிருந்து நந்திகிராமை கைப்பற்ற 2007-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(சி.பி.எம்) கட்சியினர் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டனர்.

மருத்துவமனையிலிருந்து இறந்த உடல்களை எடுத்துக்கொண்டு தளபதி ஆற்றில் வீச சென்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நந்திகிராமில் கொலைச் செய்யப்பட்டவர்களில் 9 பேரின் உடல்கள் காணாமல் போயின. இதில் இரண்டு பேரின் உடல்கள் பின்னர் தோண்டி எடுக்கப்பட்டது. இறந்த உடல்களை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் சி.பி.எம் கட்சியின் உறுப்பினரால் நடத்தப்படும் அரசு சாரா அமைப்பிற்கு சொந்தமானது. தளபதியை ஹால்தியா நீதிமன்றம் நான்கு தினங்கள் சி.ஐ.டி காவலில் வைக்க உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை: