செவ்வாய், டிசம்பர் 13, 2011

பெருநாள் தொழுகைக்கு அனுமதி கேட்டபொழுது சிறை அதிகாரிகள் அடித்து உதைத்தார்கள்: விடுதலையான முஸ்லிம் இளைஞர்கள்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து அநியாயமாக கைது செய்யப்பட்ட 14 முஸ்லிம்
 இளைஞர்கள் விரைவு நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என விடுதலைச் செய்யப்பட்டனர். இதில் 3 பேர் அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதால் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலையான 11 பேரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் பா.ஜ.கவின் வசுந்தரா ராஜே உள்பட தங்கள் மீது அநியாயமாக பழி சுமத்தி சிறையில் அடைத்த அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் முந்தைய பா.ஜ.க அரசின் பாதையை பின்தொடர்ந்து தங்களை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக சித்தரித்த முதல்வர் அசோக் கெலாட் மன்னிப்புக் கோரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுண்டரில் தொடர்புள்ளதாக ப.சிதம்பரம் பேட்டியளித்ததற்கு பிறகு சிறை அதிகாரிகள் தங்களை கொடூரமாக சித்திரவதை செய்ததாக விடுதலையான முஸ்லிம் இளைஞர்கள் கூறுகின்றனர்.

“ப.சிதம்பரம் பேட்டி அளித்த மறு தினம் நோன்பு பெருநாளாகும். பெருநாள் தொழுகைக்காக நாங்கள் அனுமதிக் கேட்டபொழுது அனைவரையும் சிறை அறையிலிருந்து வெளியே இழுத்துப்போட்டு சிறை அதிகாரிகள் எங்களை அடித்து உதைத்தனர். மூன்று வருடங்களாக நாங்கள் அனுபவித்த சித்திரவதைகளும், அவமதிப்பும் ஒரு போதும் மறக்கமுடியாதது” என நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்கள் கூறுகின்றனர்.

“பா.ஜ.க ஆட்சியில் நியமித்த போலீஸ் அதிகாரிகளை மாற்றவோ, ஜோடிக்கப்பட்ட குண்டுவெடிப்பு வழக்கில் மறு விசாரணை நடத்தவோ பின்னர் வந்த காங்கிரஸ் அரசு தயாராகவில்லை” என நிரபராதிகளான இளைஞர்களுக்காக வழக்கை நடத்திய ராஜஸ்தான் முஸ்லிம் ஃபாரம் குற்றம் சாட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை: